தள்ளுவண்டி பழக்காரரிடம், ” நீங்கள் எப்போதும் ஜாஸ்தி தான் சொல்வீங்க, ஆப்பிளுக்கு கிலோ நூறுரூபாய் தான் தரமுடியும்” என்று விலைநிர்ணயம் செய்த பெண்ணின் கொஞ்சல், கணவரிடம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யப்போன மனத்தைக் கடிவாளம் போட்டு நிறுத்திவிட்டேன். தலை தெரிந்தாலே, கதவைச் சத்தமாகச் சாத்தும் எதிர்வீட்டுப் பெண், மாதாந்திர தண்ணீர் மீட்டரைக் கணக்கெடுப்பவரிடம், ” இரண்டு பேர் இருக்கும் வீட்டிற்கு இவ்வளவு போடுகிறீர்களே” என்று கேட்ட தொனியும், முகபாவமும் சத்தத்தை Mute செய்து கேட்டால் ” போங்க, நீங்க சுத்த மோசம்” என்பார்கள் டப்பிங் ஆர்டிஸ்டுகள். கற்புணர்வில்லாத ஆண்கள், கற்பைப் பாதிக்காத செயல்களைச் செய்வதைக் கற்புணர்வு கொண்ட பெண்களும் அனுமதிக்கிறார்கள் என்பது போல் எழுதியிருந்தது இந்திரா பார்த்தசாரதி என்று நினைவு.

பெண்களைக் கேலி செய்வது என்பது வேறு, உரிமையில் பேசுவது என்பது வேறு, ஆனால் அவமரியாதை செய்வது என்பது வேறு. பெண்கள் சகஉயிர்கள் என்ற சிந்தனை சிறுதுமற்றவர்கள், அவர்களது தாய், மனைவி போன்றோர் மட்டும் விதிவிலக்குகள் என்று நினைப்பது வேடிக்கை. அவரவர் கருத்தைப் பொதுவெளியில் சொல்லாத வரை, யாருக்கும் பிரச்சனையில்லை, ஆனால் அதை வெளியில் சொல்கையில் அவர்களது கற்கால நாகரீகத்தின் தொடர்ச்சி, மாடர்ன் உடைகளைத் தாண்டி வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அவர்கள் பெண்களால் மட்டுமல்ல, ஆண்களாலும் ஒதுக்கப்பட, புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் கடைக்கண் பார்வை கிடைத்தால், இலக்கிய அந்தஸ்து எளிதாகக் கிடைக்கும், பரவலாக வெளிச்சம் கிடைக்கும், Short cut to fame என்ற பல காரணங்களினால் இவர்களது Good booksல் இருக்கப் பெண்கள் துடிப்பது தெளிவாகத் தெரிகிறது. உடலால் சோரம் போவதை விட மனதால் சோரம் போவது இன்னும் மோசமானது.

பொதுவெளியில், பொதுஇடங்களில் தங்கள் சுயமரியாதைக்காக, நம்பிக்கைக்காக, கொள்கைக்காகச் சண்டையிடும் பெண்கள் என் கண்களுக்கு அழகாகத் தோன்றுகிறார்கள். சின்மயியை அந்த சண்டைக்குப் பிறகு தான் உற்று கவனித்தேன். நல்ல அழகு. அவர்களது கருத்துக்களுடன் எனக்கு பல நேரங்களில் முரண்பாடு இருந்த போதிலும், என்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத போதிலும், அவர்கள் அழகு என்ற என் அபிப்ராயத்தில் மாற்றமில்லை. நான் கனவுலக சஞ்சாரி. Small benefitsக்காக பல்லிளிக்கும் பெண்களின் வாயின் இருபக்கமும் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. பலரும் அந்தப் பெண்கள் கொள்ளை அழகு என்கிறார்கள்.

Leave a comment