தக் ஷிலா ஸ்வர்ணமாலி:

இலங்கை, களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கள எழுத்தாளர். அந்திம காலத்தின் இறுதிநேசம் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவலின் மொழிபெயர்ப்பு.

ரிஷான் ஷெரிப்:

சிங்களத்தில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும், பல மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். மொழிபெயர்ப்புக்காக பல விருதுகளைப் பெற்றவர். சொந்தமாகவும் கவிதை, சிறுகதைத் தொகுப்பு, நாவல், கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டவர்.

ஸ்வர்ணமாலியின் சென்ற சிறுகதைத் தொகுப்பில், கதைக்கருக்கள் மிகவும் வித்தியாசமானவை. தெருவழியே என்ற சிறுகதை Call boyஐத் தேடி அலையும் நடுத்தர வயதுப்பெண்ணின் கதை. ஒரேதிடல் இரண்டு கணவர்களிடம், மாறிமாறிச் செல்லும் பெண்ணும் அவர்கள் மூவரின் உறவும், சிறுவனின் பார்வையில் இருந்து.
இலக்கியத்தில் மீறல்கள் தவிர்க்க முடியாதவை ஆனால் மீறல்கள் எல்லாம் இலக்கியம் ஆவதில்லை. சிங்களத்திற்குக் கிடைத்த பரிசு ஸ்வர்ணமாலி.

Faction என்ற Genre பெரும்பாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதப்படுவது. The Last Vicereine, The Last Mughal போன்றவையெல்லாம் Faction. ஆனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவர்களைப் பற்றி இருப்பதால் நாம் அவற்றை Historical fiction என்றே அழைக்கிறோம். ஆனால் சாமானியர்களின் சரித்திரத்தைப் புனைவில் கொண்டு வந்தால் அது Faction மட்டுமே. அதைத் தான் ஸ்வர்ணமாலி இந்த நாவலில் செய்திருக்கிறார்.

நாவலில் குறிப்பிட்ட உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு ராஜா இறந்தார். அடுத்து ராணியும் இறந்தார். என்றால் செய்தி. ராஜா இறந்தார் அவரை நினைத்து ராணி இறந்தார் என்றால் காதல் கதை. ராணி மந்திரியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ராஜா இறந்தார், குற்ற உணர்வில் ராணியும் இறந்தார் என்றால் கதையில் கூடுதல் பின்னல் விழுகிறது. இப்படியே பாரம்பரியக் கதை சொல்லலில் பின்னல்களை அதிகரித்துக் கொண்டே போகலாம். அது போலில்லாமல் ஒரு நனவோடை போல காட்சிகளைக் கத்தரித்துச் சொல்லப்பட்ட நாவல் இது.

அடுத்தது, காந்தியின் வரலாற்றை எழுதினால், தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டது, தண்டி யாத்திரை போன்ற பல முக்கிய சம்பவங்களைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
சாமானியருக்கு அந்தத் தொல்லையில்லை. அவர்கள் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள் நமக்குத் தெரியாது. அதனால், கதைசொல்லியே, அவர் விருப்பப்படுவதை மட்டும் சொல்லும்படியே இந்த நாவல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

True stories புனைவாக மாறினாலும் அதன் உண்மைத் தன்மையைத் தூக்கலாகக் காட்டுவதற்குத் துடித்துக் கொண்டிருக்கும். இந்த நூலில், புகைப்படங்கள், திருமணப் பதிவுப் பத்திரம் என்று இணைக்கப்பட்டிருந்தாலும் Fantasy elementsஐ ஸ்வர்ணமாலி கலந்திருக்கிறார். புத்தர் கதைசொல்லி முன்னால் வந்து உரையாடல் நடத்துகிறார்.

ஸ்வர்ணமாலிக்குள் ஒரு போராளியும் இருக்கிறார். ராஜபக்ஷ குறித்த விமர்சனம், புத்தரை, யசோதரையைக் குறித்த விமர்சனம் எல்லாமே சிங்களத்தில் எழுதப்படும் நூலில் சேர்ப்பதற்கு தைரியம் வேண்டும். அத்துடன் அங்கங்கே வாசகரை மெல்லியதாக Tease செய்வதும் நடக்கிறது.

கதாபாத்திரங்களை நுட்பமாக, தனித்துவமாகச் சித்தரித்திருக்கிறார். குறிப்பாக, அம்மா, தங்கை, பிரியம்வதா, அஞ்சலி. இவர்களுக்குள் ஜெயிப்பது அம்மா தான். அம்மா, அவரைப் பெற்ற அம்மாவின் மீது கடுமையான விமர்சனம் செய்பவர், தன் முதுகைப் பார்க்காததில் இருந்து அம்மாவைப் பற்றி பேச நிறையவே இருக்கிறது. அது போல் பேசாமடந்தை பிரியம்வதா. கழுவும் மீனில் நழுவும் மீன் தங்கை. அன்பே உருவாய் அஞ்சலி.

ஒரு வாழ்க்கையில் சில சம்பவ தீற்றல்களை, அங்கங்கே தெறித்து, அவற்றைக் கதைசொல்லி(Narrator) தன்னுடைய Whims and fanciesக்கு ஏற்ப சொல்லி, அதை ஒரு Impressiveஆன நாவலாக மாற்றுவது கடினம்.
அதை எளிதாகச் செய்திருக்கிறார் ஸ்வர்ணமாலி. சமகால உலக இலக்கியங்களில் காணப்படும், வாசகர்கள் நாவலில் விடுபட்டவற்றை வாசிப்பில் சேர்த்துக் கொள்ளும் பாணி கையாளப்பட்டுள்ளது. இலங்கை சிங்களவர்களின் வாழ்க்கை இருந்தாலும், நாவலில் இருக்கும் Global தன்மை இந்த நாவலை உலகின் எந்த வாசகருக்கும் அந்நியமாக்காது. இந்த நாவலை ஒரு Exxellent readஆக மாற்றியதில் ரிஷானின் பங்கு முக்கியமானது. மறுபடியும் அவருக்கு நன்றி சொல்வதைத் தாண்டி என்ன செய்யப் போகிறோம்!

பிரதிக்கு:

ஆதிரை, இலங்கை

இந்தியாவில் பனுவல், பரிசல், டிஸ்கவரி புக் பலஸ், B4Books மற்றும் பாரதி புத்தகாலயம்
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.220

Leave a comment