அச்சிபேயின் இந்த முதல் நாவல் வெளியாகி அறுபத்தி மூன்று வருடங்கள் ஆகின்றன. ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கும்
அதிகம் வாசிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாவலும் இதுவே. இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்ட நூல். ஒருவகையில் பார்த்தால் இந்த நாவலை , மேற்கத்திய நாட்டினர் பலரும் ஆப்பிரிக்க சரித்திரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து பல புத்தகங்கள் எழுதியதற்கு, பதிலளிக்கும் முகமாகவே அச்சிபே எழுதியிருக்க வேண்டும். (நாவலின் இறுதியில் வெள்ளைக்காரக் கமிஷனர் இந்த சம்பவத்தை எப்படி எழுத வேண்டும் என சிந்திப்பார்) ஆப்பிரிக்க இலக்கியத்தை உலகம் முழுதும் கவனிக்க வைத்த, இந்த நாவலில் யாரை விமர்சித்திருக்கிறாரோ, அதே நாட்டின் உயரிய விருதான புக்கர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட, இங்கிலாந்துப் பல்கலைகளின் பட்டங்களைப் பெற்ற அச்சிபே, 2013ல் மறைந்தார். நோபல் விருது இவரை கௌரவிக்கத் தவறியது.

Igbo இனத்தைச் சுற்றிவரும் கதையிது. அதே இனத்தில் பிறந்திருந்தாலும் More Loyal than the King வகையறாவாகிய கிருத்துவப் பெற்றோர்களால், கிருத்துவராக வளர்க்கப்பட்ட அச்சிபே இதுபோன்ற நாவலை எழுதியிருப்பது ஒரு ஆச்சரியம்.

நூற்றைம்பது பக்கங்களே கொண்ட சிறிய ஆனால் Powerful நாவல் இது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நாவலின் முதல்பகுதி, மையக்கதாபாத்திரத்தின் குடும்பம் மற்றும் அவன் சேர்ந்த சமூகத்தின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது பகுதி அவனை ஊரைவிட்டுக் கடத்துவதையும், வெள்ளைக்காரர்கள் வருகையையும் சொல்கிறது. மூன்றாவது பகுதி அவன் ஊர் திரும்புகையில் வெள்ளைக்காரர்கள் கோலோச்சி, நீதி வழங்குவது பற்றியது.

.காலனித்துவத்திற்கு முந்தைய ஆப்பிரிக்காவில் தொடங்கும் நாவல், Igbo கலாச்சாரத்தை, அதன் Heroவாகக் கருதப்பட்ட ஒருவனைச் சுற்றி நகர்வதன் மூலம் சொல்கிறது. பெண்களின் நிலை இப்போதைய நிலைமையை விட மோசமாக இருக்கிறது. பெண்கள் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகளில் எந்த முடிவையும் எடுப்பதற்கு கவனமாகத் தவிர்க்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் திருமணநிச்சய நிகழ்வில் அந்தப் பெண்ணின் சம்மதமோ, அவள் சேர்ந்த மற்ற பெண்களின் சம்மதமோ கேட்கப்படுவதில்லை. பெண்ணைக் கணவன் கொடுமைப்படுத்துகிறான் என்ற வழக்கில் அவள் பேசுவதில்லை, அவளது சகோதரர்களே அவளது சார்பாகப் பேசுகிறார்கள். ஆனால் சமையல் உட்பட நாள்முழுதும் அவர்கள் செய்யக் கடினமான வேலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. மனைவியை அடித்தது தப்பல்ல, புனித வாரத்தில் அடித்ததே தவறு எனும் சமூகம். பயிர்களில் கூட உயர்ரகப் பயிர்களை ஆண்கள் தான் விதைக்க வேண்டும், பெண்கள் தொடக்கூடாது. ஒரு வரையறுக்கப்பட்ட, தெளிவான ஆணாதிக்க சமூகம். ஆனால் அவர்களின் கடவுள் பெண் உருவிலேயே வருகிறார், பேசுகிறார்.. ( இப்போது நாகரீக சமூகத்தினர் அவர்களது பெண் கடவுள்களின் பெயரைச் சொல்லட்டும்).

Okonkwoவின் தந்தை பின்னால் அவனுடைய குணாதிசயம் உருவாகப் பெரிதும் காரணமாகிறார். சோம்பேறியாக, கடன் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டு…….. Okonkwo தந்தையை வெறுக்கிறான். ஒருபோதும் அவர் போல் ஆகிவிடக்கூடாது என்று தீர்மானம் செய்து, சிறுவயதிலேயே கடின உழைப்பாளியாகிறான். இது அவனது நேர்மறைப் பக்கம். அவனது இன்னொரு பக்கத்தில் அவன் ஆண்மை என்று நினைத்துக் கொண்டிருப்பது வன்முறை.
Ikemefuna சம்பவம் நாவலின் முக்கியமான கட்டம். அவனது மொத்த குறைபாடுகளையும் வெளிப்படுத்தும் கட்டம்
சிறுதொண்ட நாயனாரின் சற்றே மாறுபட்ட வடிவம்..

ஆங்கிலேயர் வருகை, எல்லா நாடுகளிலும் நடந்ததைப் போலவே இங்கும் நிகழ்கிறது. முதலில் பணிவு, வேண்டுதல், எல்லா உயிரும் சமம் என்ற போதனை (அடிமைகள் கலாச்சாரத்தைக் கொண்டு வந்ததில் இவர்களுக்கும் பங்குண்டு), சிறிய இடம் கொடுக்கச் சொல்லி இறைஞ்சுதல் என்று தொடங்குவது, பின்னர் ஊர்மக்களுக்கு நீதி சொல்வது என்பதில் முடியும். அவர்கள் கடவுளரைத் தவிர வேறு யாரும் கடவுள் இல்லை என்பார்கள். நாவலில் வரும், சந்தையில் கூடும் கிராமம் மொத்தத்தையும் சுட்டுக் கொல்வது ஒரு முக்கியமான நிகழ்வு. (Real incident – Ahiara massacre) பயத்தை ஏற்படுத்துவது. எண்ணிக்கையில் குறைவான அவர்களுடன், ஊர்காரர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி ஒரு பகுதியை அவர்கள் வேலைசெய்ய வைத்துக் கொள்வார்கள். Okonkwo போல் ஆயிரம் பேர் இருந்திருந்தால் அந்த நாட்டை விட்டே ஓடியிருப்பார்கள், ஆனால் அது நிகழவில்லை. காலனி ஆதிக்கம் எல்லா நாடுகளிலுமே ஆறாத காயங்களை ஏற்படுத்திப் போய் விட்டது.

Igbo கலாச்சாரம் நாவலில், அவர்களது பேச்சுமொழி உட்பட அழகாகப் பதிவாகி இருக்கிறது. அது நாகரீகமான கலாச்சாரம் இல்லை. மூடநம்பிக்கையில் கொலை செய்யும் கலாச்சாரம். எல்லோரும் உறவாக நினைத்து இயைந்து போகும் கலாச்சாரம். Titleகளில் பெருமிதப்படும் மக்கள். ஆங்கிலேயருக்கு சபிக்கப்பட்ட இடத்தைக் கொடுத்தால், நான்கு நாட்களில் அவர்கள் இறந்து விடுவார்கள் என்று நினைத்து இடத்தைக் கொடுக்கும் அப்பாவிகள். தங்கள் கடவுளர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்று நம்பி மோசம் போகும் வெகுளிகள். பெருநோய், ஆபத்து, அழிவு இவற்றிலிருந்து எந்தக் கடவுளும், எப்போதும், யாரையும் காப்பாற்றியதாக வரலாறே கிடையாது.

அச்சிபே Meta narrative யுத்தியை மட்டும் கையாளவில்லை, கதைக்குள் கதைகள், சம்பவங்கள், fragments, motifs and tropes எல்லாவற்றையும் கலந்து ஒரு சக்திவாய்ந்த வரலாற்று நிகழ்வைப் புனைவில் கொண்டு வந்திருக்கிறார். சின்னச்சின்ன கதாபாத்திரங்களின் கதைகள் மூல.கதையுடன் ஒன்றிணைந்து ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துவது அச்சிபேயின் கலைநுட்பம். Teaditional story tellingஉடன் Nostalgia, pride என்று பலவற்றைக் கலந்து எழுதப்பட்ட நாவல். ஆப்பிரிக்க நாவல்கள் என்று யார் பட்டியலிட்டாலும் இந்த நாவல் கண்டிப்பாக இருக்கும். Modern dystopian, Post colonial literature, African realism literature என்று பலவித தலைப்புகளில் இந்த நாவலைச் சேர்க்கலாம். Yeatsன் இந்தக் கவிதை வரிகள். நாவலின் கருவை சுருக்கமாகச் சொல்கிறது.

Turning and turning in the widening gyre
The falcon cannot hear the falconer;
Things fall apart; the centre cannot hold;
Mere anarchy is loosed upon the world,
-W.B.Yeats.

Leave a comment