Chun கொரிய எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். இதுவரை மூன்று நாவல்களை எழுதியுள்ள இவரது முதல் நாவல் இது. 2003ல் எழுதப்பட்டு, இந்த வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, புக்கர் நெடும் பட்டியலிலும் சேர்ந்து விட்டது.

புக்கர் இன்டர்னேஷனல் நெடும் பட்டியலை வாசிப்பது உண்மையில் ஆனந்தம். எவ்வளவு வித்தியாசமான கதைகளை, உலகங்களை இவை கொண்டு வந்து சேர்க்கின்றன என்பதற்கு அளவேயில்லை. இந்த நூலை கொரியர்கள் நவீன கிளாசிக் என்று புகழ்கிறார்கள்.

வடக்கு- தெற்கு போருக்கு சற்று முன்பு, பதிமூன்று வயதுப்பெண் அவளது குடிகாரத் தந்தையிடம் இருந்து விடுபட்டு முன்பின் தெரியாத மீன்வியாபாரியுடன் தொலைதூரத்திற்கு செல்கிறாள். அவளது உடலை மீன் வியாபாரி மட்டுமல்ல இன்னும் எத்தனையோ ஆண்கள் உபயோகிக்கப் போகிறார்கள். ஆனால் அவள் பலியாடு இல்லை. அவளுக்குள் இயல்பாக அமைந்த வியாபாரபுத்தி அவளை ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க வைக்கப் போகிறது. சாம்ராஜ்யங்கள் பல கொலைகள், துரோகங்கள், பழிவாங்குதல்கள் ஆகியவற்றைப் புதைத்து அதன் மேல் எழுப்பப்படுபவை.

இந்த நாவல் முக்கியமாக தாய், மகள் இருவர் பற்றிய கதை. தாய் எட்டடி என்ற பழமொழி இந்தக் கதைக்கு உதவாது. மகளுக்குப் பேசத் தெரியாது, பிறர் பேசுவது புரியாது, யாருடனும் பழகத் தெரியாது. ஆனால் அவளது தனிச்சிறப்பு அவளது அசாத்தியமான பலம். பிறக்கும் போதே ஏழுகிலோ இருந்த பெண்.

கதை முழுக்கவே மாயயதார்த்தம் ஒரு பனிமூட்டம் போல் பின்னணியில் வந்து கொண்டேஇருக்கிறது. விலங்குகள் பேசுவது, ஒற்றைக்கண் பெண்ணின் அதிசய சக்திகள், இறந்தவர் நடமாடுவது மட்டுமல்ல, மகள் பிறப்பது அவள் தந்தை இறந்து நான்கு வருடங்கள் கழித்து. அதே ராட்சஷ உடலுடனும், தந்தையின் தெளிவான முகசாடையுடனும் பிறக்கிறாள்.

Ruthlessness ,பேராசை, அடங்காக் காமம் என்பது அம்மாவிடம் இருந்தால் அசாத்திய பலமும், அப்பாவித்தனமும் மகளிடம். பெற்றோர் சேர்த்த சொத்து பிள்ளைகளுக்கு என்பது வழக்கம், இங்கே அம்மா சேர்த்த சொத்தை யார் யாரோ அனுபவிக்கிறார்கள், அவள்செய்த பாவத்தின் பலனை மகள் வட்டியோடு அனுபவிக்கிறாள். அம்மாவிடம் இருந்து எந்த மரபணுக்கூறுகளையும் பெறாது தந்தையிடம் பெற்ற பெண். உடல் வலிமை இல்லாத அம்மாவின் நெஞ்சுரமும், அசாத்திய வலிமை கொண்ட மகளின் பயங்களும் வாழ்க்கையின் முரண்கள்.

ஏன் இந்த நாவல் சிறப்பாகக் கருதப்படுகிறது? Modern Storiesஐ யாரோ ஒரு கதைசொல்லி வாய்மொழிக் கதைகளின் பாணியில் சொல்வது போல் Tone. நடுநடுவே நாம் மறந்து விடவில்லையல்லவா என்று நம்முடனும் பேச்சு. மலையோர கிராம வாழ்க்கை, Adventures, Sadism, government machinery எப்போதும் போல் எளியவரைப் பலியாடாக்குவது என்பது போல் பலவிஷயங்களை மாயயதார்த்தத்துடன் கலந்தது மட்டுமன்றி, ஒரு Unpredictability, விதி அழைத்துச்செல்லும் வழி மாந்தர் அலைக்கழிக்கப்படுவது என்று நம்மை சிலநேரம் குழந்தைகளாய், சிலநேரம் பெரியவர்களாய் நடத்தும் நாவல்.

Kim Chi-Young எல்லோருக்கும் அறிமுகமான மொழிபெயர்ப்பாளர். இவரது மொழிபெயர்ப்பில் Please Look After Mom உலகெங்கும் பரவலாகப் படிக்கப்பட்ட நாவல். அபாரமான மொழிபெயர்ப்பு இந்த நாவலும். Bora Chung, Hwang Sok-yong, Han Kang, Park Sang-young , Chun Myung-Gwan என்று தென்கொரியாவின் பிரதிநித்துவம் ஒவ்வொரு புக்கரிலும் தவறாது வந்து கொண்டிருக்கிறது. Han Kang மட்டுமே புக்கர் விருதை வென்றவர். இந்த நூல் இறுதிப் பட்டியலுக்குள் நுழையுமென்று நம்புகிறேன்.
ஆனால் அது இன்னும் மீதமிருக்கும் பத்து நூல்களின் தரத்தைப் பொறுத்தது.

Leave a comment